Subscribe:

வியாழன், 29 செப்டம்பர், 2011

உள்ளாட்சித்தேர்தல்; இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கூட்டமைப்பு...!!!

தமிழகத்தின் உள்ளாட்சி தேர்தல்களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. தமிழகத்தின் அனைத்து
பிரதான கட்சிகள் முதல் சிறிய கட்சிகள் வரை அனைத்துமே ஏறக்குறைய இந்த உள்ளாட்சி தேர்தல் களத்தை தனித்தே களம் காண்கிறார்கள்.

கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது அதிமுக தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றிகண்டு
செல்வி ஜெயலலிதா அவர்கள் மீண்டும் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றுகொண்டார்... ஆக இந்த வலிமையான கூட்டணியே தமிழகத்தின் உள்ளாட்சித் தேர்தலிலும் போட்டியிடுமென பலரும் நம்பிகொண்டிருந்த வேளையில் வழக்கப்படி முதல்வர் ஜெயலலிதா தன்னிச்சையாக தமிழகத்தில் உள்ள பத்து மாநகராட்சிகள் உட்பட பெருவாரியான நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் ஆகியவற்றிற்கு அதிமுக சார்பிலான வேட்பாளர்களை அறிவித்து அதன் கூட்டணிக்கட்சிகளை மட்டுமல்லாது எதிர்கட்சிகள் மற்றும் அரசியல் பார்வையாளர்கள் ஊடகவியலாளர்கள் என அனைவரையுமே வியப்பிலால்தினார்.

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் பாமக விசிக கொமுக மு.லீக் போன்ற கட்சிகளுடன் களம்கண்டு பெரும் தோல்வியை தழுவிய திமுக இம்முறை உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடுமென அறிவித்தது. பல ஆண்டுகளாக திமுகவின் ஒரு கிளை அமைப்பாகவே இயங்கி சமுதாயமக்கள் மத்தியில் தனக்கென இருந்த நற்பெயரை காப்பற்றிக்கொள்ள தவறிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் திமுக கூட்டணியில் இருந்து கலட்டிவிடபட்டது. அதேபோல கடந்த சட்டப்பேரவை தேர்தலை அதிமுக கூட்டணியில் சந்தித்து மூன்று இடங்களில் போட்டியிட்டு இரண்டு இடங்களில் வெற்றிகண்ட மனிதநேய மக்கள் கட்சியும் இந்த உள்ளாட்சித் தேர்தலை தனித்தே களம் காண்கிறது.

பிரதான கட்சிகள் அனைத்துமே தனித்து போட்டியிடுவது என்பது வரவேற்க்கத்தக்கது காரணம் மக்கள் அவர்களை பற்றிய எத்தகைய ஒப்பீட்டில் உள்ளார்கள் என்பதை அறியக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். இதில் முஸ்லிம்களின் நிலை எப்படி இருக்கபோகிறது...?

பொதுவாக உள்ளாட்சித் தேர்தல்களம் என்பது அரசியல் கட்சிகளைவிட தனிமனித செல்வாக்கிற்க்கே முக்கியத்துவம் கொடுக்ககூடியதாக இருக்கும். அந்த வகையில் தமிழ்நாட்டில் செயலாற்றிவரும் இஸ்லாமிய இயக்கங்கள் பரவலாக தங்களின் மனிதநேய சேவைகள் மூலமாக வெகுஜன மக்களை வெகுவாக சென்றடைந்து இருக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும்... இருப்பினும் அந்த செல்வாக்கை அதிகாரத்தை வென்றேடுக்ககூடிய கருவியாக அவர்கள் பயன்படுத்துவதில் வெல்வார்களா...? இந்த கேள்விதான் இந்த காலகட்டத்தில் நம் முன்னாள் எழுந்து நிற்கும் சவாலாக இருக்கிறது... தமிழகத்தின் பல பகுதிகளில் பரவி வாழக்கூடிய ஒரே சமுதாயம் முஸ்லிம்கள்தான்... பல நகராட்சிகள் பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகள் வரை எளிதாக வெல்லக்கூடிய வாய்ப்புள்ளவர்களும் முஸ்லிம்கள்தான்...

வெகுஜன மக்களையும் சமுதாய இளைஞர்களையும் வென்றெடுப்பதில் வெற்றிகண்ட சமுதாய அமைப்புகள் சமுதாய மக்களை முஸ்லிம்களின் வலிமையான கட்டமைப்பாகிய முஹல்லா ஜமாத்துகளை ஒருங்கிணைப்பதில் தவறிவிட்டார்கள் என்பதுதான் நிதர்சன உண்மை... தாங்கள் இதுநாள் வரை தூக்கிபிடித்த அரசியல்கட்சிகள் அலட்சியபடுத்தியவுடன் சமுதாய அமைப்புகளை ஒருங்கிணைத்து ஓரணியாக இந்த உள்ளாட்சித் தேர்தலை சந்திப்பதற்கான முயற்சிகளையாவது முன்னணி சமுதாய அமைப்புகள் முன்னெடுத்திற்க்க வேண்டும் ஆனால் இந்த சிந்தனையைகூட யாரும் முன்மொழியவில்லை...

இது குறித்து எந்த அமைப்பின் நிர்வாகியிடமாவது வினா எழுப்பினால் நாங்கள் முயற்சித்தோம் யாரும் எங்கள் முயற்ச்சிக்கு உடன்படவில்லை என்கிற "ரெடிமேட்" பதிலைத்தான் சொல்வார்கள் முஸ்லிம்கள் தனிமைப்பட்டு வாழ்ந்தே பழகிவிட்டவர்கள் தங்கள் குடும்பம் வியாபாரம் என குறுகிய வட்டதிற்க்குள்ளே
வாழ்ந்தே பொதுத்தளமான எவற்றிலும் பங்கெடுக்க தவறிவிட்டார்கள்... ஆக இவர்களை உடணடியாக மாற்றிவிட முடியாது... அதற்க்கான தொடர்முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய கடமை தங்களை மக்களின் பிரதிநிதிகளாக காட்டிக்கொள்ளும் சமுதாய அமைப்புகளுக்கு உள்ளது என்பதை முதலில் சமுதாய அமைப்புகளின் தலைமைகள் உணரவேண்டும்.

இவர்களை கடந்து நம் சமூகம் சமூக பொருளாதாரம் சமூக கல்வி சமூக அரசியல் போன்ற பொதுத்தளங்களில் பயணிக்க துவங்கிவிட்ட இஸ்லாமிய சமுதாய இளைஞர்கள் தாங்கள் சார்ந்துள்ள அமைப்புகளின் தலைமைகள் மீது கொண்ட அபரிமிதமான பற்றின்காரனமாக "சகோதரச் சண்டைகள்" மூலமாக சொந்த சமுதாயத்திற்க்குள்ளேயே பிளவுகளை ஏற்படுத்தி வருகிறார்கள் என்பது மறுக்கமுடியாத கவலைக்குரிய உண்மை...

இப்படிப்பட்ட பின்னடைவுகளுடந்தான் தமிழக உள்ளாட்சித் தேர்தலை முஸ்லிம்கள் எதிர்க்கொண்டுள்ளார்கள்... இந்த காலகட்டத்தில் ஒரு ஆறுதலான செய்தி என்னவெனில் தமிழகத்தின் பிரதான கட்சிகளுள் ஒன்றான கடந்த சட்டப்பேரவை தேர்தலில் நூறு சதவிகித தோல்வியை தழுவிய போதும் சிதறாத கட்டமைப்பாக இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தோழர்.தொல்.திருமாவளவன் அவர்களின் முயற்சியால் சுமார் 14 இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் கூட்டமைப்பாக இணைந்து இந்த தேர்தலை சந்திக்க இருக்கிறார்கள்... இது வரவேற்க்ககூடிய நல்ல முயற்சி தேர்தலில் வெற்றி வருகிறதோ இல்லையோ எதிர்காலத்தில் அதிகாரத்தை வெல்வதற்கான அடித்தளமாக இம்முயற்சி அமையும் என்பதில் சந்தேகமில்லை...

தமிழகத்தின் அனைத்து அதிகார மையங்களையும் வெல்லக்கூடிய வலிமை படைத்தவர்கள் முஸ்லிம்களும் தலித்துகளும் என்கிற வரலாற்று உண்மையை தோழர்.திருமா தமிழகத்தின் அனைதுதரப்பினருக்கும் அறிவித்திருக்கிறார்... சென்னை உட்பட மூன்று மாநகராட்சிகளில் மேயர் வேட்பாளர்களாக முஸ்லிம் கூட்டமைப்பினர் அறிவிக்கப்பட்டுள்ளனர்...

இந்த நிகழ்வுகளில் இருந்து முஸ்லிம்கள் சில மறுக்கமுடியாத உண்மைகளை உணரவேண்டும்... என்னவெனில் விசிக தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகளை ஓன்று. குறிப்பாக சுமார் நாற்பது லட்சம் அதிகாரபூர்வ உறுப்பினர்களை தன்னகத்தே கொண்டது அரசியல் கட்சிகளுக்கு அதிகார பதவிகள் என்பது மிக முக்கியமானது. அதிகாரத்தில் இல்லாதபோது பல கட்சிகள் தங்களது அடிமட்ட உறுப்பினர்கள் முதல் மேல்மட்ட நிர்வாகிகள் வரை இழக்க நேரிடும் அது விசிகவிற்கும் பொருந்தும் இருந்தபோதும் அரசியல் ஆதாயத்தை முன்னிலைபடுத்தாத அரசியல் தலைவனாக தோழர்.தொல்.திருமாவளவன் இருக்கிறார் என்பதற்கு இந்த உள்ளாட்சித் தேர்தல் ஒரு நிரூபணம்... திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய பாமக இந்த தேர்தலை சிறுத்தைகளுடன் இணைந்து சந்திக்க விரும்பியது அதனை வெளிபடையாகவே அதன் தலைமை ஊடகங்கள் வாயிலாக அறிவித்தது ஆனால் அந்த வரவேற்ப்பை எல்லாம் விட்டு விட்டு சிறுத்தைகளுக்கு அரசியல் ஆதாயத்தை தரக்கூடிய நிலையை ஒதுக்கிவிட்டு பெரும் வாக்குவங்கிகள் இல்லாத இஸ்லாமிய இயக்களுடன் கைகோர்த்திருப்பது நிச்சயமாக ஒரு அரசியல் அதிசயம் என்பதில் மிகையல்ல...

தமிழக அரசியல் தலைமைகளில் தங்களுக்கான நல்ல நண்பன் யார் என்பதை முஸ்லிம்கள் உணர வேண்டும்... சாதி ஒழிப்பு, மக்களின் ஜீவாதார உரிமைகள் மீட்பு, கல்வி பொருளாதார அதிகார கையகபடுதுதல் ஆகியவற்றில் முன்னெடுப்பு இவற்றில் ஒரே அலைவரிசையில் பயணிக்கும் முஸ்லிம்களும் தலித்துகளும் ஓரணியில் திரள வேண்டும் இந்த அற்புதமான தருணத்தை தோழர்.திருமா அவர்களின் காலத்திலேயே நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்... இன்றைக்கு தோழர் திருமா அவர்களின் முயற்சியால் ஒருங்கினைதுள்ள இஸ்லாமிய அமைப்புகள் வலிமையில் வேண்டுமானால் குறைந்தவர்களாக இருக்கலாம் ஆனால் அவர்கள் முன்னெடுத்துள்ள இந்த முயற்சி நிச்சயமாக எதிர்கால சமுதாயத்தின் வரலாற்றில் பதிவு பெரும். என்பதில் எள்முனையளவும் சந்தேகமில்லை...

எதிர்காலத்தில் வலிமையான இஸ்லாமிய அமைப்புகள் இதுபோன்ற ஒருங்கிணைப்புகளை மேம்படுத்தி அரசியல் போன்ற ஆளுமைதளங்களை கைப்பற்ற வேண்டும் தோழர்.தொல்.திருமா போன்றவர்கள் அதற்க்கு உண்மையாக உளபூர்வமாக உடன் இருப்பார்கள்...