Subscribe:

ஞாயிறு, 26 டிசம்பர், 2010

ராமநாதபுரம்: தீவுக்கு சுற்றுலா சென்றபோது கடலில் படகு கவிழ்ந்து 12 பெண்கள் பலி: மேலும் 8 பேர் உயிருடன் மீட்பு

ராமநாதபுரம், டிச. 26-

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே அமைந்துள்ளது பெரியபட்டிணம். இந்த கிராமத்தை சேர்ந்த பெரும்பாலானோர் ஆஸ்திரேலியா, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை கொண்டாடுவதற்காக தங்களது சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

பெரிய பட்டிணத்தை சேர்ந்த சீனி உருது குடும்பத்தினரும், ஆஸ்திரேலியாவில் இருந்து கடந்த வாரம் வந்திருந்த அவரது உறவினர்களும் சுற்றுலா செல்ல திட்டமிட்டனர்.

இன்று காலை அவர்கள் 2 மோட்டார் பொருத்தப்பட்ட நாட்டுப்படகுகளில் பெரிய பட்டிணத்திலிருந்து 7 கடல் மைல் தூரத்தில் உள்ள அப்பா தீவுக்கு புறப்பட்டனர். ஒரு படகில் ஆண்கள் 20 பேரும் மற்றொரு படகில் குழந்தைகள் உள்பட பெண் கள் 20 பேரும் சென்று கொண்டிருந்தனர்.

தீவுக்கு சற்று தொலைவில் ஆண்கள் பயணித்த படகு சென்றபோது பின்னால் பெண்கள் வந்த படகை காணவில்லை. அந்த படகை தேடியபோது, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தென்படவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் பெரிய பட்டிணத்தில் உள்ள தங்களது உறவினர்கள் மற்றும் மீனவர்களுக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து சுமார் 20-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் புறப்பட்டனர். தீவை ஒட்டியுள்ள 4 பகுதிகளுக்கும் தனித்தனியாக பிரிந்து சென்ற அவர்கள் மாயமான படகை தேடினர்.

இந்த தகவல் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஹரிகரனுக்கும் தெரிவிக்கப்பட்டது. உடனே கடலோர காவல்படையினர் மற்றும் கடற்படை வீரர்கள் தேடும் பணியை தீவிரப்படுத்தினர். மாயமான படகை தேடும் பணியில் ஹெலி காப்டரும், அதிநவீன ஹோவர்கிராப்ட் படகும் ஈடுபடுத்தப்பட்டது.

இதற்கிடையே மாயமான படகு பலத்த காற்று காரணமாக நடுக்கடலில் மூழ்கியது. அந்த பகுதிக்கு கடற்படையினர் விரைந்தனர். கடலில் மூழ்கி பிணமாக மிதந்த பரக்கத் (வயது36), ஹபீப்நிஷா (38) உள்பட 9 பேரின் உடல்களை மீட்டனர்.மேலும் நடுக்கடலில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 2 குழந்தைகள் உள்பட 11 பேரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அவர்களை ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு 3 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் சாவு எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது. அவர்கள் அனைவரும் பெண்கள். மீட்கப்பட்ட 8 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கடலில் படகு மூழ்கிய தகவல் கிடைத்ததும் பெரிய பட்டிணத்தை சேர்ந்தவர்கள் கடற்கரைக்கு திரண்டு வந்தனர். சுற்றுலாத்துறையின் அனுமதியின்றி பெரிய பட்டிணத்தில் இருந்து தீவுக்கு படகை இயக்கியது தொடர்பாக போலீசாரும் விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்த பெரும் விபத்தால் பெரியபட்டிணம் கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது.

கருத்துகள் இல்லை: