Subscribe:

சனி, 25 டிசம்பர், 2010

சமூக சிந்தனையாளர் ஷாநவாஷின் உரை...

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் டிசம்பர் 6 அன்று,'தலித் - இஸ்லாமியர் அரசியல் எழுச்சி நாள்' கருத்தரங்கம் நடத்தப் பட்டது.தி.நகர் சர் பிட்டி தியாகராயர் கலையரங்கில், வி.சி.க பொருளாளர் மு.முகமது யூசுப் முன்னிலையில் நடைபெற்ற அந்த நிகழ்வுக்கு, கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை வகித்தார்.

கொட்டித் தீர்த்த பெருமழைக்கு இடையே மிகச் சிறப்பாக குழுமியிருந்த மக்கள் திரளுக்கு மத்தியில், திருமாவின் உரைத்தொகுப்பு அடங்கிய குறுந்தகட்டை வெளியிட்டு ஆளூர் ஷாநவாஸ் பேசியதாவது:
''இந்தக் குளத்திற்கு நீங்கள் விடுதலை வேண்டும் என்று கேட்கின்றீர்கள்; இந்தக் குளத்தில் எங்கள் மக்கள் குளிக்க முடியாது.இந்தக் கிணற்றுக்கு நீங்கள் விடுதலை வேண்டும் என்று கேட்கின்றீர்கள்; இந்தக் கிணற்று நீரை எங்கள் மக்கள்உயிர் போகும் வேளையில் கூட, தாகத்திற்கு அருந்த முடியாது.இந்தச் சாலைக்கு நீங்கள் விடுதலை வேண்டும் என்று கேட்கின்றீர்கள்; இந்தச் சாலையில் எங்கள் மக்களின் பிணங்கள் கூட போக முடியாது.முதலில் எங்களுக்கு சமூக விடுதலை கிடைக்கட்டும். அதன் பிறகு இந்திய விடுதலையைப் பற்றி பேசிக் கொள்ளலாம்'' என்றுகாந்தியின் முன்னால் நின்று ஆண்மையோடு ஒலித்த ஒரே வீரர் புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவு நாளில் இங்கே நாம் கூடியிருக்கின்றோம்.

புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளைத் தேர்வு செய்து, இந்துத்துவ சக்திகள் பாபர் மஸ்ஜிதை இடித்துத் தகர்த்தார்கள்என்று சொன்னால், அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்து விட்ட ஒரு தவறு இன்றைக்கு இரண்டு சமூகங்களின் எழுச்சிக்கு வழியமைத்திருக்கிறது.தலித்துகள் தலித்துகளாக அணி திரண்டார்கள்; முஸ்லிம்கள் முஸ்லிம்களாக அணி திரண்டார்கள். இரண்டு சமூகமும் தனித் தனியாக இருக்கிற வரை; தனித் தனியே களம் காணுகின்ற வரை இந்துத்துவம் மென்மேலும் எழுச்சியடைந்து வளர்ச்சியடையும். அதைத் தடுக்க வேண்டும் என்றால்; அதை முறியடிக்க வேண்டும் என்றால் இரண்டு சமூகங்களும் இணைய வேண்டும் என்ற கருத்தியலைக் கையிலெடுத்து போராடக் கூடியவராக இன்றைக்கு அண்ணன் திருமாவளவன் இருக்கிறார்.

இங்கே பேசுகிற போது, வி.சி.க பொதுச்செயலாளர் அண்ணன் கலைக்கோட்டு உதயம், மிகச் சிறப்பான கருத்துக்களை எடுத்துச் சொன்னார்கள். முஸ்லிம்களுக்காக நாடாளுமன்றத்தில் வீற்றிருக்கிற ஜே.எம்.ஹாரூன் அவர்களும், அப்துல் ரஹ்மான் அவர்களும் பேசாத விசயங்களைக் கூட, அண்ணன் திருமாவளவன் அவர்கள் பேசினார் என்கிற கருத்தை சொன்னார்கள். உண்மைதான். ஏன் இந்த நிலை?ஹாரூன் அவர்கள் காங்கிரசினுடைய கை சின்னத்தில் போட்டியிட்டு காங்கிரசின் கைப்பாவையாக இருக்கிறார்.அப்துல் ரஹ்மான் அவர்கள் முஸ்லிம் லீக் இயக்கத்தின் சார்பில் நின்று ஜெயித்தாலும், அவர் தி.மு.க வின் உதய சூரியன்சின்னத்தில் நின்று வென்றிருக்கிறார்.அந்தக் கட்சிகள் என்ன முடிவெடுக்கிறதோ; அந்தக் கட்சித் தலைமை என்ன சொல்லுகிறதோ, அதை மீறி ஒரு வார்த்தை கூட பேச முடியாத நிலையில் அவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அதை உடைத்தெறிந்து வென்ற ஒரே தலைவன் இந்த தமிழ் மண்ணில் அண்ணன் திருமாவளவன் மட்டும் தான். 'நான் பிற கட்சிகளின் சின்னத்தில் நின்று அவர்களின் கைப்பாவையாக சென்றால், இந்த ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு உண்மையாக என்னால் பேச முடியாது. நான் சுய சின்னத்தில் தான் நிற்பேன். தோற்றாலும் பரவாயில்லை' என்று களத்திற்குப் போன அந்தத் துணிவு தான் இன்றைக்கு அவரை நாடாளுமன்றத்தில் பாபர் மஸ்ஜிதிற்காகப் பேச வைத்திருக்கிறது.முஸ்லிம் உறுப்பினர்களை பேசாமல் இருக்க வைத்திருக்கிறது.இங்கே தலித்துகள் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்கிற ரீதியில் பேசினார்கள். நான் முஸ்லிம்கள் சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று பேசுகிறேன்.

ஏனென்றால் பாபர் மஸ்ஜித் இடிப்பு என்பது ஏதோ 1992 டிசம்பர் 6 ஆம் நாள் காலையில் திட்டமிட்டு மாலைக்குள் முடிந்து விட்ட ஒரு நிகழ்வு அல்ல. அதற்காக இந்துத்துவ சக்திகள் 60 ஆண்டுகளுக்கு மேலாக திட்டமிட்டிருக்கிறார்கள்; வியூகம் அமைத்து உழைத்திருக்கிறார்கள்; நம்மை சூழ்ச்சியால் முறியடித்திருக்கிறார்கள். ஒரு 60 ஆண்டுகால தொடர் போராட்டத்தினுடைய நீட்சியாக அவர்களால் 1992 டிசம்பர் 6 அன்று, இந்த உலகமே வேடிக்கைப் பார்க்க மிக எளிதாக பாபர் மஸ்ஜிதை இடிக்க முடிந்தது.இன்றைக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது என்று சொன்னால், அந்த தீர்ப்பை கேட்டவுடன் நாம் கொந்தளிக்கிறோம். உண்மையில் தோழர்களே அது 2010 செப்டம்பர் 30 ஆம் நாள் தீர்மானிக்கப் பட்ட தீர்ப்பு அல்ல. 1949 இல் பாபர் மஸ்ஜிதிற்குள் ராமர் சிலைகளைக் கொண்டு வந்து வைத்தார்களே, அப்போதே தீர்ப்பு எழுதப்பட்டு விட்டது.அதனுடைய அறிவிப்பு தான் 60 ஆண்டுகளுக்குப் பிறகு வந்திருக்கிறது.

நாம் காங்கிரசை நம்பிக்கொண்டு, நீதி மன்றங்களை நம்பிக் கொண்டு, இந்த அரசும் நீதி மன்றங்களும் நமக்கு நீதி செய்யும்;நீதி செய்யும் என்று கூறி இந்த மக்களைத் தவறாக வழிநடத்திக் கொண்டிருக்கிறோம். மாற்று வழிமுறைகளைப் பற்றி சிந்திக்கவோ, மாற்று வழிமுறைகளை இந்த மக்களுக்கு கற்றுக் கொடுக்கவோ இந்த தலைமைகள் தவறியதனால், இன்றைக்குத் தீர்ப்புக்குப் பின் பாபர் மஸ்ஜித் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது என்று கூட தெரியாமல் தடுமாற வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.

ஆக, இந்தச் சூழ்நிலையில் இந்த மக்களை அரசியல் சக்தியாக எழுச்சி பெற வைப்பதன் மூலமாகத்தான் இன்னொரு பள்ளிவாசலை இழக்காமல் தடுக்க முடியும். அரசியல் சக்தியாய் எழுச்சி பெற்றால் மட்டும் தான் நமது இழப்புகளில் இருந்து நாம் மீள முடியும்; நமது உரிமைகளை நாம் பாதுகாக்க முடியும்.காங்கிரஸ் அரசும், நீதி மன்றங்களும் சேர்ந்து தான் இன்றைக்கு பாபர் மஸ்ஜிதை கபளீகரம் செய்திருக்கிறார்கள்.பாரதிய ஜனதா அரசு இருக்கும் போது பாபர் மஸ்ஜித் இடிக்கப் படவில்லை. இன்றைக்கு அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பும் பாரதீய ஜனதா அரசாங்கத்தில் வரவில்லை. 60 ஆண்டுகளுக்கு முன் பாபர் மஸ்ஜிதிற்குள் ராமர் சிலைகளை வைத்தார்களே அப்போதும்காங்கிரசு அரசுதான்; அந்த சிலைகளுக்கு பூஜை செய்வதற்காக கதவைத் திறந்து விட்டதும் காங்கிரசு அரசுதான்; பாபர் மஸ்ஜித் இடிப்பை வேடிக்கைப் பார்த்ததும் காங்கிரசு அரசுதான்; இன்றைக்கு கேவலமான தீர்ப்பும் காங்கிரசு அரசில் தான் வந்திருக்கிறது.

அப்படியென்றால் பாரதிய ஜனதா தானே இந்துத்துவத்தின் அரசியல் சக்தி. அவர்கள் ஆட்சியில் இருக்கும் போது கூட நடக்காததுகாங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது நடக்கிறது என்று சொன்னால், இந்துத்துவம் ஆட்சியில் இருக்கும் போதுதான் முஸ்லிம்களுக்கு எதிராக, ஒடுக்கப் பட்ட மக்களுக்கு எதிராக சோதனைகளும் வேதனைகளும் நடக்கும் என்றில்லை.அது ஆட்சியில் இல்லாத போதும் மிகக் கூர்மையாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அது காங்கிரசின் வடிவத்தில் கூட இயங்கிக் கொண்டிருக்கும் என்பதைத்தான் இந்த சம்பவங்கள் நமக்கு எடுத்தியம்புகின்றன.

காங்கிரசை அகற்றி விட்டு பாரதிய ஜனதாவையோ, அல்லது பாரதிய ஜனதாவை அகற்றி விட்டு வேறொருவரையோ பதவியில் அமர்த்தி விட்டால் நமக்கு விடிவு கிடைத்து விடுமா என்றால் நிச்சயம் இல்லை. யார் பாதிக்கப் பட்டவர்களாக இருக்கிறார்களோ; யார் பாதிப்பின் வலியையும், வேதனையையும் நேரடியாக உணர்ந்தவர்களாக இருக்கிறார்களோ அவர்கள் ஆட்சியில் அமரும் போது தான், பாதிக்கப் பட்ட ஒடுக்கப் பட்ட மக்களுக்கு உண்மையான விடிவு கிடைக்கும்.
இன்றைக்கு தலித்துகளும் முஸ்லிம்களும் இந்துத்துவத்தால் பாதிக்கப் பட்டவர்களாக இருக்கிறார்கள். இந்தப் பின்னணியோடு தான் நாங்கள் திருமாவை நம்பிக்கையோடு பார்க்கிறோம். அவர் எங்கள் விசயத்தில் எடுத்துப் போராடிய எந்த ஒரு இடத்திலும் சோரம் போனதாகவோ, அல்லது பேசிவிட்டு திரும்ப வாங்கிக் கொண்டதாகவோ இல்லை. மிகத் தெளிவாகப் பேசுகிறார். பேசுவதற்கு முன் யோசித்துப் பேசுகிறார். தீவிரமாக களமாடுகிறார். அதனால் தான் எங்களுக்கு மீண்டும் மீண்டும் அவர் மீதான நம்பிக்கை உறுதிப் பட்டுக் கொண்டிருக்கிறது.

ஆக, நாம் நம்மை சுய பரிசோதனை செய்து கொண்டு, கடந்த காலங்களில் நமது இழப்புகளுக்கு என்ன காரணம் என்பதை மீளாய்வு செய்து கொண்டு, நாளையை நமக்கானதாக மாற்றுவதற்கு நாம் முயற்சிக்க வேண்டும். அது இங்கே தனித் தனியே நாம் களம் காணுவதால் நடக்காது. வரலாறு நமக்கு அந்தப் பாடத்தைக் கற்றுத் தந்திருக்கிறது. நாம் இணைந்து சேர்ந்து அதிகாரத்தை வென்றெடுப்பதற்கு என்னென்ன வழிமுறைகள் உண்டோ அவை அனைத்தையும் கையிலெடுக்கக் கூடிய மக்களாக நாம் மாற வேண்டும்.வாய்ப்புக்கு நன்றி சொல்லி விடைபெறுகிறேன்.

கருத்துகள் இல்லை: