Subscribe:

வியாழன், 9 ஜூன், 2011

திருமாவளவன்: அரசியல் தெளிவு...துணிவு...தீர்க்கம்...


நடந்துமுடிந்துள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள்
அனைத்துமே எதிர்பார்க்காத தோல்வியை சந்தித்துள்ளது. வெற்றியை எதிர்பார்க்காத
பல அதிமுக கூட்டணி கட்சிகள் வெற்றிகண்டுள்ளது. தங்களின் தோல்விக்கான காரணத்தை
இன்னும் ஆய்வு செய்யமுடியாவண்ணம் திமுக கூட்டணி கட்சிகள் முடங்கிபோய் உள்ளது...


இந்த தேர்தல் தொல்வியைவிடவும் அதிகமான தோல்விகளை சுவைத்துள்ள அரசியலில் கரைகண்ட திமுக தலைமையே இன்னும் சகஜநிலைக்கு வரவில்லை என்றே சொல்லவேண்டும்...


ஆனால் நடந்துமுடிந்துள்ள தேர்தலை லட்சிய வேட்கையுடனும் தேர்தல் ஆணைய அங்கிகாரத்தை பெற்றே ஆக வேண்டுமென்கிற தீர்க்கதுடனும் களம்கண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி நூறு சதவிகித தோல்வியையே சந்தித்துள்ளது...

ஆரம்ப
காலங்களில் தேர்தல் அரசியலை புறக்கணித்து "சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை" என்கிற மந்திரசொல்லுடன் சமூக விடுதலை போராளிகளாய் களம் கண்டவர்கள் சிறுத்தைகள் காலப்போக்கில் அரசியல் அதிகாரத்தை வென்றால் மட்டுமே சமூகத்தை பூட்டியுள்ள அதிகார விலங்குகளை உடைதெறிய முடியும் என்கிற உண்மையை உணர்ந்து தோழர்.தொல்.திருமாவளவன் சிறுத்தைகளை தேர்தல் பாதைக்கு அழைத்துவந்தார்.. பல்வேறு பின்னடைவுகளுக்குப் பிறகு தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக சிறுத்தைகளை வார்தெடுத்தார் தோழர்.திருமா...

தலித்
அரசியலை முன்னெடுத்த பல தமிழக தலைவர்கள் மத்தியில் இல்லாத போர்க்குணமும் கொள்கைதீர்க்கமும் கொண்ட திருமா அவர்களையும் சிறுத்தைகளையும் கண்டு தமிழக அதிகார ஆளுமைகள் கலங்கிதான் போனார்கள் என்பதினை மறுக்க இயலாது.
தங்கள் மீதுள்ள சாதி முத்திரையையும் வன்முறையாளர்கள் என்கிற அடையாளத்தையும் திருமா
வெகுஜன சமூக மக்களின் உரிமைகளுக்காக போர்குரல் எழுப்பியதன் மூலமாக களைந்தார் சிறுத்தைகள் இன்று பன்முக சமூக மக்களின் அரசியல் ஆதாரம் என்றால் அது மிகையல்ல...

ஒடுக்கப்பட்ட
சமூகங்களின் குறிப்பாக இஸ்லாமிய மக்களின் பல்வேறு பிரச்சனைகளை திருமா கையிலெடுத்தார்... அதனை இந்திய இறையாண்மைக்கு எதிரான பாசிஸசக்திகள் ரசிக்கவில்லை... திருமா அவர்களுக்கு உலக தமிழ் மக்களிடையே பெருகிவந்தத செல்வாக்கை சாதி இந்துக்களால் பொறுக்கமுடியவில்லை திருமா யாருடநெல்லாம் கைகோர்த்து தமிழகளின் வாழ்வுரிமைக்காக போராடினாரோ அவர்களாலேயே தனிமைபடுத்தப்பட்டார்...
அவரது தியாகங்கள் கொச்சைபடுதபட்டன. ஈழ தமிழ் மக்களின் ஜீவாதார உரிமைகளை வென்றெடுக்க திருமா காட்டிய தீர்க்கமும் வேகமும்கூட மற்றவர்களால் விமர்சிக்கப்பட்டது

அது
பற்றியெல்லாம் கவலைகொள்ளாது தமிழகத்தில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களை அரசியல் படுத்தவும்
அமைப்பாக்கவும் திருமா தொடர்ந்து போராடினார் இப்படி பல சிக்கல்களுடனும் எதிர்ப்புகளுடனும் இந்த
தேர்தலை சந்தித்தார்கள் சிறுத்தைகள்... எதிர்பார்க்காத பெரும் தோல்வியும் சிறுத்தைகளை கவ்வியது.

திமுகவின் தோல்வியை மகிழ்ந்தவர்கள் இருக்கிறார்களோ இல்லையோ சிறுத்தைகளின் தோல்வியை
திருவிழாவாக கொண்டாடியவர்கள் பலர் உண்டு... ஆம் திருமா முன்னெடுத்து செல்லும் மாற்று
அரசியல் முஸ்லிம்களையும் தலித் மக்களையும் ஒருங்கிணைக்கும் அரசியல் கட்டமைப்பு இவைகள் சாத்தியமானால் பல அரசியல் கட்சிகள் காணமல் போகும் அபாயம்... ஆகவே சிறுத்தைகளின் தோல்வி அவர்களை மகிழசெயதது...

சிறுத்தைகள்
அவ்வளவுதான் இனிமேல் திருமாவின் அரசியல் வாழ்க்கை முடிந்ததது என்றெல்லாம் மகிழ்ந்தவர்களுக்கு அண்மையில் நடத்து முடிந்த விசிகவின்
செயற்குழு மூலமாக தான் இந்த தோல்விகளை கண்டெல்லாம் கலங்கி முடங்கும் சராசரியான அரசியல்வாதியல்ல என்பதை அடையாளபடுத்தி அவர்களின் மகிழ்ச்சிக்கு முற்றுபுள்ளி வைத்துள்ளார்...


"சிறுத்தைகளின் இந்த அரசியல் எழுச்சிக்கு உங்களில் பலர் காரணம் ஆனால் இந்த படுதோல்விக்கு நான் மட்டுமே காரணம் தோல்விக்கான முழுப்பொறுப்பும் என்னையே சாரும்" இந்த வீரியமான வார்த்தைகள் விசிகவின் செயற்குழுவில் திருமா உதிர்த்தது.

தோல்விக்கான
காரணத்தை ஆய்வு செய்கிறோம் என்கிற பெயரில் காலத்தை விரயம் செய்யாமல் தோல்வியின் சுவடை தூக்கி எறிந்துவிட்டு சிறுத்தைகளை அடுத்தகட்ட நகர்வுக்கு அழைத்துசெல்ல முனைந்துள்ள திருமா அவர்கள் நிச்சயமாக ஒரு அதிசயமான அரசியல்வாதிதான் என்பதில் மாற்றுகருத்துக்கு இடமில்லை...


"என் மீதும் சிறுத்தைகளின் அரசியல் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள் என்னுடன் தொடர்ந்து வாருங்கள் நம்பிக்கை இழந்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுங்கள் ஒரு உடன்பிறப்பாக உங்களின் நண்பனாக வாழ்த்தி அனுப்பிவைக்கிறேன்" இந்த துணிவு எந்த அரசியல் தலைவனிடம் காணமுடியும்..!

தோல்வியை
மறந்துவிட்டு இனிவரும் ஐந்தாண்டுகளை மக்களை அமைப்பாக்கவும் அரசியல்படுத்தவும் முனைந்துள்ள தோழர்.திருமா அவர்களுக்கு தமிழகளின் வாழ்வுரிமைக்கு சிறுத்தைகளை பங்களிப்பு மிக முக்கியமானதாக இருப்பதை உணர்ந்த தமிழர்களின் சார்பாக சில வார்த்தைகளை வேண்டுகோளாக அல்லது ஆலோசனைகளாக முன்வைக்க வேண்டுமென்பதே நமது நோக்கம்...
விசிக தமிழக அரசியலில் ஒரு மாற்று சக்தி என்பதை எவரும் மறுக்கவோ மறக்கவோ முடியாது... தோழர் திருமா அண்மைய அரசியல் தலைவர்களில் மாறுபட்டவர் அரசியல் ஆதாயத்தை மட்டுமே
கவனதில்கொள்ளும் தலைமைகளுக்கு மத்தியில் அடுத்த தலைமுறையை சிந்திக்கும் ஆளுமை... சாதியாலும் மதத்தாலும் மொழியாலும் ஒதுக்கப்பட்டுள்ள மக்களின் உரிமைகளுக்கு முன்னுரிமைகொடுக்கும் வலிமை... சாதி ஒழிப்பும் சமூக விடுதலையும் தலையாய முக்கியம் என்பதன் விளக்கம்... இன்றைக்கு விசிகவின் கட்டமைப்பில் பல்வேறு சமூகங்களை திருமா உள்வாங்கி இருக்கிறார்... பல்வேறு சமூகங்களின் நன்மதிப்பையும் எதிர்பார்ப்பையும் திருமா பெற்றிருக்கிறார்...


தோல்விக்கான காரணங்களை புறந்தள்ளிவிட்டு மீண்டுள்ள சிறுத்தைகளை பாராட்டும் அதேவேளையில் களையெடுப்புகளின் மூலமாக களையப்படவேண்டிய முரண்பாடுகளையும் கவனிக்க வேண்டும்... சிறுத்தைகள் இன்றைக்கு எந்தளவிற்கு மக்கள் மத்தியில் அங்கீகாரம் பெற்றுல்லார்களோ அதே அளவிற்கு வெறுப்புகளையும் பெற்றே உள்ளார்கள் என்பதை மறைக்க முடியாது.

சில
சிறுத்தைகள் மேற்கொள்ளும் கட்டபஞ்சாயத்து ஒட்டுமொத்த விசிகவையுமே விமர்சனங்களுக்குளாக்கியே உள்ளது பல ஊடகங்கள் இவற்றை பெரிதாக்குவதால் விசிகவின் மதிப்பு குறைந்துவருவதையும் கவனிக்க வேண்டியது அவசியம் அவசரம்... கட்டபஞ்சாயதுகளில் ஈடுபடுவோரை திருமா அவர்கள் அடையாளம் கண்டு உடணடியாக கட்டுபடுத்த வேண்டியது கட்டாயம்...


விசிகவை ஒரு சாதி அமைப்பாக அல்லாமல் பன்முக சமூகங்களின் அதிகார மையமாக உருவகபடுத்தும் திருமா அவர்களின் முயற்சி வெற்றிகண்டே உள்ளது... மாநில பொருளாளராக இஸ்லாமிய சமூகத்தை சார்ந்த தோழர்.முகமது யூசுப் கொள்கைவிளக்க அணியின் வன்னிய சமூகத்தை சார்ந்த தோழர் சைதை பாலாஜி ஆகியோரை கட்சி பொறுப்பில் மட்டுமல்லாது கடந்த தேர்தலில் வேட்பாளராக்கியது மூலம் விசிக பன்முக சமூகங்களின் கட்சி என்பதை தோழர்.திருமா நிரூபித்துள்ளார்...

அதே
வேளையில் தொகுதி கிடைக்கவில்லை என்பதற்காக கட்சியிலிருந்து விலகிய நாடார் சமூகத்தை சார்ந்த விசிகவின் முன்னாள் பொதுசெயலாளர் தோழர்.கலைகொட்டுதயம் போன்றோரையும் கவனத்தில்கொள்ள வேண்டும் தோழர்.கலைகொட்டுதயம் விலகியதும் அவருக்கு சொந்தமான தமிழன் தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியில் நாடார் சமூகத்தை சார்ந்த விசிகவின் பொதுசெயலாளர் கலைக்கோட்டுதயம் அக்கட்சியிலிருந்து விலகினார் என அறிவித்தது... ஆக தோழர் திருமாவின் சாதிக்கு அப்பாற்பட்ட அரசியலை உள்வாங்காத பலர் இன்னும் விசிகவில் இருக்கிறார்கள் என்பதை தோழர்.திருமா உணரவேண்டும்...


அதிகமான உட்பிரிவுகளை விசிக கொண்டிருப்பதால் அதன் நிர்வாகிகளுக்கு மத்தியில் ஒரு புரிந்துணர்வு இல்லை. ஒருங்கிணைந்த அரசியல் இல்லை. தங்களின் அணிகளின் செயல்பாடுகளை கவனிக்கும் அவர்களால் விசிகவின் வளர்ச்சிக்கு ஒருங்கிணைந்து செயலாற்ற முடிவதில்லை. எனவே உட்பிரிவுகளை சுருங்க செய்து நிர்வாகத்தை ஒருமுகபடுத்த வேண்டும்... அதிகமான முஸ்லிம்களும் இன்று விசிகவை நோக்கி வருவதால் அவர்களுக்கான அங்கீகாரத்தை ஒருங்கிணைந்த கட்டமைப்பின்கீழ் வழங்க வேண்டும்...

இதுவரை
அரசியல் வாசனை நுகராத பலரும்
விசிகவின் கொள்கையின்பால் ஈர்க்கப்பட்டு இணைந்து வருகிறார்கள்... ஆகவே அவர்களுக்கான அரசியல் பயிற்சியை பயிலரங்கங்கள் மூலம் வழங்கிட வேண்டும்...


அரசியல் மாற்றத்தை மக்களுக்கு விளங்க செய்ய சிறுத்தைகளுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய அவகாசம் இந்த ஐந்தாண்டுகாலம் அதனை முறையாக பயன்படுத்தினால் நிச்சயமாக 2016 விசிகவின் அரசியல் எழுசியாண்டாகவே மலரும் இதை எந்த கொம்பனாலும் தவிர்க்கமுடியாது...

தங்கள் தலைமையின் கொள்கையை சிறுத்தைகள் முழுமையாக உணர வேண்டும் விசிகவின் மற்ற சமூக பொறுப்பாளர்களுடன் இணக்க போக்கை கடைபிடித்து அரவணைத்து அரசியல் பண்ண வேண்டும்... தோழர்.திருமா அவர்கள் ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் அமைப்புகளை ஒருங்கிணைத்து
அரசியல் கட்டமைப்பை உருவாக்க முயற்சிக்க வேண்டும்... இந்த முயற்சியை காலம்தாழ்த்தாமல் இப்போது முன்னெடுக்க வேண்டும் அப்போதுதான் எதிர்வரும் ஐந்தாண்டுகளின் முடிவில் மாற்று அரசியலை முழுமைபடுத்த முடியும்...

தோழர்.தொல் திருமாவளவன் அவர்களின் அரசியல் தெளிவும்... துணிவும்... தீர்க்கமும் நிச்சயமாக முறையான திட்டமிடலும் செயலும் அமையுமேயானால் மாற்று அரசியலின் அதிகார வெற்றியை பெற்றேதீரும்...

வேங்கை.சு.செ.இப்ராஹீம்

கருத்துகள் இல்லை: