Subscribe:

திங்கள், 14 மே, 2012

அன்பு தம்பி ஆஜம் அவர்களுக்கு...

அன்பு தம்பி ஆஜமிர்க்கு இனிய ஸலாதுடனும் துஆக்களுடனும்... உன் அண்ணன் வேங்கை எழுதுகிறேன்... நலமா என்றுகூட உன்னை கேட்கமுடியாத கையறுபட்ட நிலையில்தான் இக்கடிதத்தை தொடர்கிறேன்...

உனக்கு ஆறுதல் சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை... கருவில் உன்னை காத்து வளர்த்திட்ட அன்னை...இன்று கல்லறையில்... நீயோ... விடை தெரியாத சிறை கொட்டடியில்... இழப்புகளை மட்டுமே தொடரும் உன் இதயம்...எத்துனை வலியோடிருக்கும்... 

சகோதரா... நீசத்தியத்திற்க்காக சிறைபட்டாய்... சதிவலையில் பிணைக்கப்பட்டாய்...உன்னைப்போல எத்தனை ஆஜம்கள்... தாய் ஜீனத்தம்மாள்போல எத்துனை தாய்மார்கள்... நினைக்கையில் எங்கள் இதயம் வலிக்கிறது... 

கலங்காதே சகோதரா... இறையவன் எடுத்துகொண்டது அவனுக்கு உறியதைதானே...இன்று தாய் ஜீனத்தம்மாள்... இறையவன் நாடினால் நாளை நாமும்கூட... இழப்புகளை ஏற்கும் மனம் எவருக்கும் கிடையாது...இருப்பினும் ஏற்றுதானே ஆகவேண்டும்... 

ஆனால்...சத்தியமாய்... உரைக்கிறேன்...சத்தமிட்டு உரைக்கிறேன்... என் இறையவன் மீது நான் கொண்ட ஈமானின் வலிமையுடன் உரைக்கிறேன்... உன்னைப்போல உள்ளே வாடும் உன்னைப்போல இழப்புகளால் வாடும்... சகோதரனின் விடியல் வெகுதூரமில்லை... சாத்தியமாகும் வரை எதுவுமே பாரமில்லை... 

அநியாயம் செய்தவனெல்லாம் இன்று அதிகாரவர்க்கமாய் இருக்கும்போது... மக்களை சுரண்டியவனெல்லாம் இன்று சுகபோகமாய் இருக்கும்போது பாவமறியாத உன்னை போன்ற ஆஜம்கள் மட்டுமே ஏன் சிறையில் வாடவேண்டும்... சிறைபட்டாய்...தகப்பனை இழந்தாய்... வாழ்கையின் இனிமையை இழந்தாய்... இதோ இன்று ஈன்ற அன்னையை இழந்தாய்... 

இழப்பு..இழப்பு...இழப்பு...எத்துனை இழப்புகள்... இதனை நினைக்கும்போது எங்கள் இதயங்களில் எரிமலை பிழம்புகள்... இறையவன் நாட்டத்தால் இன்று நாடே உனக்கான விடுதலை முழக்கத்துடன் களமாடுகிறது... எமக்குள் நம்பிக்கை உரம்கூடுகிறது... 

சத்தியம் சத்தியமாய் சாகாது... சத்தியம் சத்தியமாய் சாகாது... சத்தியம் நிச்சயமாய் வென்றே தீரும்...
சிறையில் உண்னுள் எரியும் நெருப்பு இன்று எங்களை சுடுகிறது... உண்ணும் உணவும் பருகும் நீரும்கூட கேள்விகளை கேட்கிறது... காரணம் நானும் ஒரு தாய்க்கு மகன்தானே... நானும் மனைவிக்கு கணவன்தானே... நானும் பிள்ளைகளின் தகப்பன்தானே... உன்நிலையில் நானிருந்தால் ...

ஆம் இந்த கேள்விதான் எம்மை சுட்டெரிக்கிறது... ஆளுவோருக்கும் மனித மனம்தானே அதனால்தான் அந்த நம்பிக்கையில்தான் உன்னிலையினை உரக்க சொல்கிறோம்... தமிழ் உறவுகளின் 
உணமையான உணர்வுகளுடன் இணைந்து சொல்கிறோம்... 

சகோதரா... உன் கண்ணீர்தான் இறுதியானதாக இருக்க வேண்டும்... இனி ஒரு ஆஜம் கண்ணீர்விடக்கூடாது... உன்னை மீட்பது எமது கடமை... அதற்காக உன்னிடம் நாங்கள் கேட்பது அதற்காக உன்னிடம் நாங்கள் எதிர்பார்ப்பது... அல்லாஹுவிடம் எங்களின் வீரியம் குன்றாத காரியமாற்றிட துஆ... நாளை மறுமை நாளில் மஹ்ஷரில் நாம் இணைந்து நிற்கும்போது எமக்காக சுவனகதவுகள் திறக்க வேண்டும் என்கிற துஆ... 

இறையவன் நாடினால்... இம்மையில் உன்னை மகிழ்ச்சியுடன் சந்திப்பேன்...இல்லையெனில்மறுமையில் உனக்காக வாதிட்ட மனநிறைவுடன் சந்திப்பேன்... 

உன் விடியலின் வெளிச்சத்தை தேடி உன் சகோதரன் மீண்டும் இனிய ஸலாத்துடன்... 
வேங்கை.சு.செ.இப்ராஹீம் 


கருத்துகள் இல்லை: